×

தனி விமான செலவு ரூ.20 லட்சத்தை புதுச்சேரி அரசின் தலையில் கட்டிய பவர்புல் பெண்மணி பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘மா ஜி அமைச்சரை கிண்டலடித்த தொண்டர்களால் ஆர்ப்பாட்டத்தில் சலசலப்பாமே..’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘இலையின் சேலம் விஐபி அணியில் கடலோர மாவட்டத்தில் மாவட்ட செயலாளராக மணியானவர், மில்க் பெயரான 2 மாஜி அமைச்சர்கள் இருக்காங்க. கட்சியில் 2 அணியாக செயல்படுவது போல், 2 மாஜி அமைச்சர்களும் தொண்டர்கள் மத்தியில் காட்டிக்கொள்ளாமல் தனித்தனியாக செயல்பட்டு வருகின்றனர். கட்சி சார்பில் எந்த நிகழ்ச்சி நடந்தாலும் சரி மாஜி அமைச்சர்கள் அவரது ஆதரவாளர்களுடன் தனித்தனியாக வந்து கலந்து கொள்கின்றனர். ஆனால் 2 பேரும் ஒருவருக்கொருவர் வெளிப்படையாக பேசிக்கொள்வது கிடையாது. சேலம் விஐபி அணி சார்பில் கடலோர மாவட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருப்பதால் அதிக அளவில் கூட்டத்தை காட்ட வேண்டும் என மணியானவர் அவரது ஆதரவாளர்களுக்கு உத்தரவு போட்டு இருந்தார். ஆனால் எதிர்பார்த்த அளவில் கூட்டம் வரவில்லை. கடும் அப்செட் ஆன மணியானவர், ஆர்ப்பாட்டத்தில் என்ன பேச வேண்டும் என்பது கூட தெரியாமல் கள்ளச்சாராயம் பெருகி விட்டது. கஞ்சா விற்பனை அதிகரித்து விட்டது என உளறினார்.

ஆர்ப்பாட்டத்தில் குறைந்த அளவில் கலந்து கொண்ட தொண்டர்கள் கூட, நாம் ஆட்சி காலத்தில் கள்ளசாராயம் விற்பனை செய்யப்படவில்லையா? கஞ்சா விற்பனை நடக்கவில்லையா? இல்லை டாஸ்மாக் கடைகளில் கூடுதல் பணம் கேட்கவில்லையா? ஏதையாவது பேசவேண்டும் என்பதற்காக இப்படியெல்லாம் வாய்க்கு வந்தபடி உளரக்கூடாது. முதலில் என்ன பேச வேண்டும் என தெரிந்து கொண்டு சரியாக பேச வேண்டும் என கிண்டல் அடித்ததால் சலசலப்பு ஏற்பட்டது. இதனால் அப்செட் ஆன மணியானவர் பேச்சை பாதியிலேயே முடித்துக்கொண்டாராம்’’ என்றார் விக்கியானந்தா. ‘‘குஷ்புவுக்கு என்ன புது சிக்கலாம்..’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.
‘‘சர்ச்சையான கருத்துக்களை தெரிவித்து அடிக்கடி சிக்கிக் கொள்பவர் நடிகை குஷ்பு. காங்கிரஸ் கட்சியில் இருந்த அவர் சில காலம் ஒதுங்கி இருந்தார். கருத்து வேறுபாடுகள் காரணமாக பின்னர் தாமரை கட்சியில் ஐக்கியமாகி விட்டார். இதனால் அவர் தற்போது தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினராக உள்ளார். ஆனால் வழக்கம் போல் சமூக வலைதள சர்ச்சையில் சிக்கியது தான் அவரது பதவியை தற்போது கேள்விக்குறியாக்கி உள்ளது. அதாவது பெண்களை இழிவாக சித்தரித்து குஷ்பு பதிவிட்டதாக நெல்லை மாநகர போலீசில் நடிகை குஷ்பு மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. அவரது புகார் குறித்து போலீசார் சட்ட நிபுணர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.

மகளிருக்கு பாதிப்பு என்றால் நடவடிக்கை எடுக்க வேண்டிய ஆணைய உறுப்பினர் பதவியில் இருக்கும் ஒருவரே பெண்களை இழிவாக விமர்ச்சித்ததாக வழக்கு பதிவானால் அவரது பதவி தப்புமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஒவ்வொரு கட்சியாக தாவியவருக்கு இங்கேயும் சிக்கல் எழுந்துள்ளது’’ என்றார் விக்கியானந்தா. ‘‘தேனிக்காரின் மா.செ. கண்கலங்கி நின்றதின் காரணம் என்ன..’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘இலைகட்சியில் ஏற்பட்ட பிளவின் காரணமாக சேலத்துக்காரரும், தேனிக்காரரும் தனித்தனி அணியாக இயங்கிக்கிட்டு வாராங்க. சேலத்துக்காரரின் கை ஓங்கிய நிலையில், தேனிக்காரர் அவரது ஆதரவாளர்கள் கொண்ட மாவட்ட செயலாளர்களை நியமிச்சாரு. அவர்களும் எங்களுக்கும் இலைக்கட்சி சொந்தமுன்னு சொல்லிக்கிட்டு வாராங்க. இதில் தனி மரமா இருக்கும் தேனிக்காரரும், குக்கர் காரரும் இணைஞ்சிட்டாங்களாம். அதிலிருந்து தேனிக்காரர் அணிக்கு கட்சியை வளர்ப்பது குறித்தான எந்த உத்தரவும் வரலையாம். நிசப்தம் நிலவுதாம். இதனால நிர்வாகிகள் திக்குதெரியாத காட்டில்

கண்ணைக்கட்டி விட்டது போல இருக்காங்களாம். நம்மிடம் இருப்பவர்களை மட்டும் விட்டுடாதீங்கோன்னு சொல்லியிருக்காங்களாம். ஆனா மாங்கனி மாநகரில் தேனிக்காரரின் அணியில் இருந்து நியமனம் செஞ்சவங்களில் முப்பதுக்கும் மேற்பட்டோர் எதிரணிக்கு ஓட்டம் பிடிச்சிட்டாங்களாம். கடந்த ரெண்டு நாளுக்கு முன்பு ரெண்டு லேடி நிர்வாகிகள் சேலத்துக்காரர் அணியில் போய் சேந்துட்டாங்களாம். இதனை கேள்விப்பட்ட தேனிக்காரரர் அணியினர் ரொம்பவே ஷாக்காயிட்டாங்களாம். அந்தஅணியின் மா.செ., சேலத்துக்காரிடம் சேர்ந்தவர்களின் வீட்டுக்கே போய் காலில் விழுந்து கெஞ்சி, நீங்க வரலைன்னா என்னோட பதவிக்கு ஆபத்து வந்திடுமுன்னு கண்கலங்கி மீண்டும் அழைச்சிக்கிட்டு வந்தாராம். இதன்பிறகே அவரது பதவி தப்பியதா அவரது எதிர்கோஷ்டியினர் பேசிக்கிட்டிருக்காங்க’’ என்றார் விக்கியானந்தா ‘‘தனி விமான செலவு ரூ.20 லட்சத்தை புதுச்சேரி அரசின் தலையில் கட்டிட்டாராமே பவர்புல் பெண்மணி..’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.

‘‘தெலங்கானாவில், முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையில், பாரத் ராஷ்ட்ரீய சமிதி ஆட்சி நடக்கிறது. இந்த மாநில கவர்னராக உள்ள பவர்புல் பெண்மணிக்கும் மாநில அரசுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. கவர்னருக்கு உரிய மரியாதையை அளிக்க மாநில அரசு தவறுவதாக பவர்புல் பெண்மணி குற்றஞ்சாட்டி வருகிறார். இந்த விவகாரத்தில், கவர்னருக்கும், முதல்வருக்கும் இடையே பலமுறை நேரடியாக மோதல் நடந்துள்ளது. உச்சக்கட்டமாக கடந்த 2022, 2023ம் ஆண்டில் நடந்த குடியரசு தினவிழாவை அம்மாநில அரசு நடத்தவில்லை. இதனால் ஐதராபாத்தில் உள்ள ராஜ்பவனில் பவர்புல் பெண்மணி மூவர்ண கொடியை ஏற்றினார். தெலங்கானாவில் எளிதாக விழாவை முடித்துவிட்டு தனி விமானத்தில் புதுச்சேரிக்கு வந்து தேசிய கொடியேற்றினார். 2022ம் ஆண்டில் ரூ.11.5 லட்சமும், 2023ம் ஆண்டில் ரூ.8.5 லட்சம் ஆக மொத்தம் ரூ.20 லட்சம் தனி விமான செலவு கணக்கை தெலுங்கானா மாநில அரசுக்கு அனுப்பி வைத்தார்.

தெலங்கானாவில் தான் குடியரசு தின விழாவை அரசு புறக்கணிக்கும் என்கிறபோது புதுவையில் இருந்து தேசிய கொடியேற்ற வேண்டியது தானே. ஏன் தெலங்கானாவுக்கு வர வேண்டும். இதற்கான செலவை தெலங்கானா மாநில அரசு ஏற்காது எனக்கூறி கோப்புகளை திருப்பி அனுப்பி விட்டது. இதனால் விரக்தி அடைந்த பவுல்புல் பெண்மணி, புதுவை மாநில அரசின் தலையில் ரூ.20 லட்சம் செலவு கணக்கை கட்டிவிட்டார். இந்த விவகாரம் இங்கு அரசியல் கட்சி தலைவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே, சம்பளம் போட வழியில்லாமல் புதுவை அரசு திக்குமுக்காடி வருகிறது. இந்நிலையில் விமான செலவை புதுவை அரசின் தலையில் கட்டுவது எந்தவகையில் நியாயம் என கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்த விவகாரம் புதுச்சேரி அரசியலில் புயலை ஏற்படுத்தி உள்ளது’’ என்றார் விக்கியானந்தா.

The post தனி விமான செலவு ரூ.20 லட்சத்தை புதுச்சேரி அரசின் தலையில் கட்டிய பவர்புல் பெண்மணி பற்றி சொல்கிறார்: wiki யானந்தா appeared first on Dinakaran.

Tags : PowerPool ,Puducherry government ,Yananda ,Ma Ji ,minister ,Peter ,Leaf ,Salem ,Powerbull ,
× RELATED புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கு எச்சரிக்கை